மதுரை தல்லாகுளம் அவுட்போஸ்ட் பேருந்து நிறுத்தம் அருகே, மோட்டார் மூலம் இயங்கிய கரும்புச்சாறு எந்திரத்தில் வியாபாரியின் சட்டை சிக்கிக்கொண்ட விபத்தில், கல்லூரி மாணவர்களின் துரித நடவடிக்கையால் அவர் எந்தவிதக் காயமுமின்றி உயிர் தப்பியுள்ளார்.
மதுரையைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் வழக்கம் போல் கரும்புச்சாறு கடை நடத்தி வந்தபோது, எதிர்பாராத விதமாக அவரது சட்டை மோட்டார் எந்திரத்திற்குள் சிக்கிக்கொண்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் செய்வதறியாது திகைத்த நிலையில், அருகில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் உடனடியாக ஓடிவந்து மின் இணைப்பைத் துண்டித்து எந்திரத்தை நிறுத்தினர்.
எந்திரத்திற்குள் சட்டை சிக்கி வெளியே எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டதால், உடனடியாகச் சட்டையைக் கிழித்து வியாபாரியை மீட்டனர். மாணவர்களின் இந்தத் துரிதமான மற்றும் விவேகமான செயலால், வியாபாரி எந்தவிதக் காயமும் இல்லாமல் பெரும் விபத்திலிருந்து தப்பினார். ஆபத்தான கட்டத்தில் உயிர் காக்க உதவிய கல்லூரி மாணவர்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
- Madurai
கரும்புச்சாறு எந்திரத்தில் சிக்கிய சட்டை – வியாபாரி உயிர் தப்பினார்
கரும்புச்சாறு எந்திரத்தில் சிக்கிய சட்டை – கல்லூரி மாணவர்களின் துரிதசெயலால் வியாபாரி உயிர் தப்பினார்
