சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், தவெக அரசைக் கண்டித்து வரும் 14-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசிய முக்கியக் கருத்துகள்:
காவிரி விவகாரம் மற்றும் போராட்டம்: டெல்டா பகுதிகள் வறண்டு கிடக்கும் சூழலில், மேகதாது அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டாமல் ஆளும் தவெக அரசு மறைமுக ஆதரவு அளிப்பதாகக் குற்றம்சாட்டி, விருதுநகரில் வரும் 14-ஆம் தேதி அதிமுக சார்பில் கண்டனப் போராட்டம் நடத்தப்படும்.
நிவாரணம் மற்றும் கடன்: விவசாயிகளுக்கு அளித்த பயிர்க்கடன் முழு ரத்து வாக்குறுதியை நிறைவேற்றாமல் அரசு வஞ்சித்துள்ளது. மேலும், ஆட்சி பொறுப்பேற்று 3 மாதங்களுக்குள் 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ள தவெக அரசு, அன்றாட நிர்வாகத்திற்குக்கூட வழியில்லாத அவலநிலையில் உள்ளது.
பட்டாசுத் தொழில் பாதுகாப்பு: காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தைப் பயன்படுத்திப் பட்டாசுத் தொழிலுக்கு நெருக்கடி கொடுத்தால் அதிமுக போராட்டத்தில் குதிக்கும். முறையாக உரிமம் பெற்றுத் தொழில் செய்பவர்களுக்குத் தொல்லை கொடுத்தால் சிவகாசியில் பட்டாசுத் தொழிலாளர்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அதிமுக மேற்கு மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் விஜயகுமரன் மற்றும் நகர, ஒன்றிய அணிப் பிரிவு நிர்வாகிகள் பலர் திரளாகக் கலந்துகொண்டனர்.
- Virudhunagar
அதிமுக ஆலோசனைக் கூட்டம் – ஆகஸ்ட் 14-ல் ஆர்ப்பாட்டம்
அதிமுக ஆலோசனைக் கூட்டம் – தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 14-ல் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
