இலங்கை மக்களுக்குச் சிறுதானியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அங்கு சிறுதானிய விவசாயத்தை அதிகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக இந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் கணேசநாதன் கீதிஸ்வரன் தெரிவித்தார்.
இலங்கையில் சிறுதானிய சாகுபடி மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு முறைகளைக் கற்றுக்கொள்வதற்காக, விருதுநகர் அருகே தாதம்பட்டியில் உள்ள 'மோத்தீஸ் மில்லட்' சிறுதானிய மதிப்புக்கூட்டுப் பொருள் தயாரிப்பு நிறுவனத்தை இலங்கை துணைத் தூதர் கணேசநாதன் கீதிஸ்வரன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிறுவனத்தின் நிறுவனர் சிவக்குமார் அவருக்குச் சிறுதானிய வகைகள், அதன் சத்துக்கள் மற்றும் தயாரிப்பு இயந்திரங்கள் குறித்து விளக்கமளித்தார்.
ஆய்வைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய துணைத் தூதர் கணேசநாதன் கீதிஸ்வரன் தெரிவித்த முக்கியக் கருத்துகள்:
விழிப்புணர்வு மற்றும் பயிற்சி: இலங்கையில் சிறுதானியம் குறித்த விழிப்புணர்வு மிகக் குறைவு. ஏற்கனவே புத்தளத்தில் சிறுதானியம் பயிரிடப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள பெண்களின் சுயதொழிலை ஊக்குவிக்கவும், நிலையான வளர்ச்சியை ஏற்படுத்தவும் கூடுதல் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
ஆரோக்கிய நன்மைகள்: சிறுதானியங்கள் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும், உடல் எடையைப் பராமரிக்கவும், இரத்த அழுத்தம் வராமல் பாதுகாக்கவும் பெரிதும் உதவுகின்றன.
பொருளாதார மேம்பாடு: இலங்கையின் பொருளாதாரம் தற்போது சீரடைந்து வரும் நிலையில், உள்ளூர் உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம் இறக்குமதியைக் குறைத்து பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்த முடியும்.
மீனவர்கள் விவகாரம்: தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கைகள் குறித்து இரு நாட்டு அரசுகளும் தொடர்ச்சியாகப் பேசி, மீனவர்களும் படகுகளும் மீட்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
- Virudhunagar
இலங்கையில் சிறுதானிய விவசாயத்தை அதிகப்படுத்த திட்டம்
இலங்கையில் சிறுதானிய விவசாயத்தை அதிகப்படுத்த திட்டம் – விருதுநகரில் இலங்கை துணைத் தூதர் ஆய்வு
