ஜவுளி உற்பத்தித் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்தும் நோக்கில், 95 நாடுகள் பங்கேற்கும் 'இந்தியா ஐ.டி.எம்.இ. 2026' (India ITME 2026) சர்வதேச ஜவுளி இயந்திரக் கண்காட்சி நொய்டாவில் வரும் டிசம்பர் 4 முதல் 9 வரை நடைபெற உள்ளது. இது குறித்த முன்னோட்ட ரோடு ஷோ மதுரை ஓட்டல் ராயல் கோர்ட்டில் நடைபெற்றது.
இந்திய ஐ.டி.எம்.இ. சொசைட்டி சார்பில் 6 நாட்கள் நடைபெற உள்ள இக்காட்சி குறித்த விவரங்கள்:
பிரம்மாண்ட கண்காட்சி: இது சொசைட்டியின் 12-வது கண்காட்சியாகும். இதுவரை இல்லாத வகையில் சுமாா் 2 லட்சத்து 40 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் 18 அரங்குகளில் இம்மாபெரும் கண்காட்சி நடைபெறுகிறது.
சர்வதேச பங்கேற்பு: இதில் 95 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும், 1,800-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களும் பங்கேற்க உள்ளனர். மேலும், உலகளாவிய ஜவுளித் துறையைச் சேர்ந்த 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தல்: நார், நூல், துணி வகைகள் முதல் முழுமையாகத் தயாரிக்கப்பட்ட ஆடைகள் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிகள் வரையிலான அதிநவீன இயந்திரங்களும் புதிய கண்டுபிடிப்புகளும் இதில் இடம்பெறவுள்ளன.
ஜவுளி மற்றும் ஜவுளிப் பொறியியல் துறையில் இந்தியாவை ஒரு உலகளாவிய மையமாக வலுப்படுத்தும் இக்கண்காட்சியில் பங்கேற்குமாறு ஜவுளி உற்பத்தித் துறையினர் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- Madurai
டிசம்பர் 4 முதல் இந்திய சர்வதேச ஜவுளி இயந்திரக் கண்காட்சி
நொய்டாவில் டிசம்பர் 4 முதல் இந்திய சர்வதேச ஜவுளி இயந்திரக் கண்காட்சி – மதுரையில் ரோடு ஷோ
