விருதுநகர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இந்து நாடார்கள் பலசரக்கு மகமைக்குப் பாத்தியப்பட்ட தெப்பக்குளத்தில், மாசடைந்த தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, தற்போது பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சேறு மற்றும் சகதிகளை அகற்றி தூர்வாரும் பணிகள் தீவிரமாகத் தொடங்கப்பட்டுள்ளன.
நகரின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் கடந்த 1866-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தத் தெப்பக்குளம், 23 அடி ஆழமும், 330 அடி நீளமும், 300 அடி அகலமும், 5.5 லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவும் கொண்டது. மேலும், குளத்தின் நீராதாரத்திற்காக மூன்று பெரிய கிணறுகளும் தோண்டி அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த 2005-ஆம் ஆண்டுக்குப் பிறகு முறையாகத் தூர்வாரப்படாத இக்குளத்தில், தற்போது தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசியதுடன் மீன்களும் செத்து மிதந்தன. இதனால் குளத்தைத் உடனடியாகத் தூர்வார வேண்டும் எனப் பல்வேறு தரப்பு மக்களும் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த 10 நாட்களுக்கு முன்பு மின் மோட்டார்கள் மூலம் குளத்தில் இருந்த பழைய தண்ணீர் மற்றும் மூன்று கிணறுகளில் தேங்கியிருந்த நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நேற்று இரவு பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, இன்று காலை நகர் பிரமுகர்கள் முன்னிலையில் குளத்தில் தேங்கியுள்ள சேறு மற்றும் சகதிகளை அகற்றும் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளன.
- Virudhunagar
தெப்பக்குளம் தூர்வாரும் பணி – பொக்லைன் இயந்திரம் மூலம் சேறு-சகதி அகற்றம்
விருதுநகர் தெப்பக்குளம் தூர்வாரும் பணி – பொக்லைன் இயந்திரம் மூலம் சேறு-சகதி அகற்றம்
