உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா வரும் 17-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான பூர்வாங்க பூஜைகள் மற்றும் யாகசாலை வழிபாடுகள் மிகச் சிறப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் வடக்கு ஆடி வீதியில் 184 யாக குண்டங்களுடன் 56 யாகசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் அம்மனுக்கும் சுவாமிக்கும் தலா 33 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமம் மற்றும் ஸம்ஹிதா ஹோமம் உள்ளிட்ட சிறப்பு ஹோமங்களை மூன்று நாட்களாக நடத்தி வருகின்றனர்.
கும்பாபிஷேகத்திற்காகக் காசியில் இருந்து 1,008 லிட்டர் கங்கை நீரும், இதர 7 புண்ணிய நதிகளில் இருந்து 1,008 லிட்டர் புனித நீரும் வரவழைக்கப்பட்டுள்ளன. மேலும், 9 வகையான தானியங்கள், மூலிகைப் பொடிகள், ஆலங்குச்சி, அரசங்குச்சி, பசுநெய் உள்ளிட்ட 96 வகையான ஹோமப் பொருட்களும், 514 சுவாமிகளுக்குத் தேவையான கலசங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயிலில் உள்ள அனைத்து கோபுரங்களுக்கும் வர்ணம் பூசப்பட்டு, கலசங்களுக்கு நூல் சுற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதுடன், கோயில் தற்போது முழுமையான புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.
- Madurai
மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் – 3 நாள் யாகசாலை பூஜைகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா – 3 நாள் யாகசாலை பூஜைகள்
