விருதுநகர் மேலரத வீதியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறைக்குச் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ சொக்கநாத சுவாமி மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் 57-வது ஆவணிப் பெருந் திருவிழாவை முன்னிட்டு, இன்று காலை தேரோட்டம் மிகச் சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது.
கடந்த 16-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கிய இத்ததிருவிழாவில், தினந்தோறும் சொக்கநாதருக்கும் மீனாட்சி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் தீபாராதனைகளும் நடைபெற்று வந்தன.
திருவிழா நாட்களில் சுவாமியும் அம்மனும் ரிஷபம், பூதம், அன்னம், காமதேனு, கைலாசம், யானை, நந்தி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, பல்வேறு மகமைதாரர்கள் சார்பில் அமைக்கப்பட்ட மண்டகப்படிகளில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சொக்கநாதரும் மீனாட்சி அம்மனும் எழுந்தருள, நகர்மன்றத் தலைவர் மாதவன், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தேரை வடம் பிடித்து இழுத்துத் தொடங்கி வைத்தனர்.
கோயிலில் இருந்து புறப்பட்ட தேர் மூளிப்பட்டி அரண்மனை, தேசபந்து மைதானம், மெயின் பஜார், தெற்கு ரத வீதி மற்றும் மேலரத வீதி வழியாகச் சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தது. தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு "ஹர ஹர சிவ சிவ" கோஷங்களுடன் சாமி தரிசனம் செய்து தேரை வடம் பிடித்து இழுத்து ஆன்மிகப் பேறு பெற்றனர்.
- Virudhunagar
ஸ்ரீ சொக்கநாத சுவாமி மீனாட்சி அம்மன் திருக்கோவில் ஆவணித் திருவிழா
ஸ்ரீ சொக்கநாத சுவாமி மீனாட்சி அம்மன் திருக்கோவில் 57-வது ஆவணித் திருவிழா
