விருதுநகர் காமாட்சி அம்மன் மாளிகையில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் 12-வது மாநில மாநாட்டின் முதல் நாள் நிகழ்வுகள் நேற்று கோலாகலமாகத் தொடங்கின. தமிழகம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்துகொண்டுள்ள இம்மாநாட்டில் பல்வேறு முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
கொடியேற்றத்துடன் தொடங்கிய இம்மாநாட்டில், தீர்மானங்கள் முன்மொழிதல், கருத்தரங்கம், மகளிர் மாநாடு மற்றும் மாநில நிர்வாகிகள் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. தேசிய, மாநில மற்றும் மக்கள் நலன் சார்ந்த 150 முக்கிய தீர்மானங்கள் இம்மாநாட்டில் முன்மொழியப்பட்டு அரசாங்கத்திற்கு அறிக்கையாக வழங்கப்படவுள்ளன.
மாநாட்டில் பேசிய மாநிலத் தலைவர் ரமேஷ், MGNREGS திட்டம் VPG திட்டமாக மாற்றப்பட்டுள்ள நிலையில், ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 150 நாட்கள் வேலை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இதுவரை சராசரியாக 30 முதல் 35 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தத் தனியாக ஊழியர் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றார்.
பழைய ஓய்வூதியத் திட்டம் வலியுறுத்தல்: தேர்தல் நேரத்தில் அரசு அளித்த வாக்குறுதியின்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும், அதை விடுத்து டேக்ஸ் திட்டங்களைச் செயல்படுத்துவதில் அரசு முனைப்பு காட்டுவது ஏற்புடையதல்ல எனவும் அவர் கேட்டுக்கொண்டார். இம்மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
- Virudhunagar
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மாநாடு – பழைய ஓய்வூதியத்திட்டம் கோரி முழக்கம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மாநாடு – பழைய ஓய்வூதியத்திட்டம் & தனி ஊழியர் கட்டமைப்பு கோரி முழக்கம்
