வரும் 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் இலக்கில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில், மத்திய அரசின் ‘விக்ஷித் பாரத் யங் லீடர்ஸ் டயலாக் 2027’ போட்டிகளில் விருதுநகர் மாவட்ட இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என மை பாரத் மாவட்ட இளைஞர் நல அலுவலர் காவியா முத்துலட்சுமி கேட்டுக்கொண்டுள்ளார்.
மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில், 'மை பாரத்' தளம் மூலம் பொது அறிவுத் துறையில் இளைஞர்களுக்கான இணையவழி வினாடி வினா போட்டிகள் நடைபெறவுள்ளன.
'விக்ஷித் பாரத் சேலஞ்ச் ட்ராக்' எனப்படும் முதல் சுற்றில் வினாடி வினா போட்டியும், அதனைத் தொடர்ந்து கட்டுரை, ஓவியம், நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. இதன் மூலம் இளைஞர்கள் தங்கள் கலை மற்றும் அறிவுத்திறனை மேம்படுத்திக்கொள்ளவும், பாரதத்திற்கான புதுமை வடிவமைப்பு யோசனைகளைப் பகிரவும் இது அரிய வாய்ப்பாக அமையும்.
15 வயது முதல் 29 வயது வரையிலான இளைஞர்கள் MyBharat.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்து இப்போட்டிகளில் கலந்துகொள்ளலாம். வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வரை பதிவு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், விருதுநகர் மாவட்ட இளைஞர்கள் அனைவரும் இதில் ஆர்வமுடன் பங்கேற்று வளர்ந்த இந்தியா 2047 இலக்கை அடையத் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
- Virudhunagar
மை பாரத் மாவட்ட இளைஞர் நல அலுவலர் பேட்டி
விருதுநகரில் மை பாரத் மாவட்ட இளைஞர் நல அலுவலர் காவியா முத்துலட்சுமி பேட்டி
