விருதுநகர் அருகே உள்ள ஆர்.ஆர்.நகர் தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் 50-வது ஆண்டு பொன்விழா திருவிழா தேர்பவனியுடன் மிகச் சிறப்பாக நிறைவுபெற்றது.
கடந்த மாதம் 31-ஆம் தேதி மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோனிசாமி சவரிமுத்து தலைமையில், பங்கு தந்தையர்கள் பீட்டர்ராய் அடிகளார், அருள்தாஸ் அடிகளார் மற்றும் இறைமக்கள் முன்னிலையில் கொடியேற்றப்பட்டுத் திருவிழா தொடங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒன்பது நாட்களுக்கு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஆலயத்தில் தினசரி நவநாள் திருப்பலியும் மறையுரையும் நடைபெற்றன.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி, மதுரை உயர் மறைமாவட்ட முதன்மை குரு ஜான் பிரிட்டோ பாக்கியராஜ் அடிகளார், பொருளாளர் அடைகல ராஜா அடிகளார், செயலக முதல்வர் தேவதாஸ் அடிகளார் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. வண்ண மலர்கள் மற்றும் மின்விளக்குகளால் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட தேரில் ஆரோக்கிய அன்னையின் திருவுருவம் பவனி வந்தது.
ஆவே மரியே' என்ற பக்தி முழக்கங்களுடனும், இன்னிசைப் பாடல்களுடனும் ஆர்.ஆர்.நகர் முக்கு ரோட்டில் பொதுமக்களின் தரிசனத்திற்காகத் தேர் நிலைநிறுத்தப்பட்டு மீண்டும் ஆலயம் வந்துசேர்ந்தது. இதில் ஆர்.ஆர்.நகர், சாத்தூர், விருதுநகர், சிவகாசி, திருத்தங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவப் பெருமக்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
தேர்பவனியைத் தொடர்ந்து ஆடம்பர கூட்டுத்திருப்பலியும் மறையுரையும் நடைபெற்றன. பின்னர் கொடியிறக்கப்பட்டுத் திருவிழா அதிகாரப்பூர்வமாக நிறைவுபெற்றது. இவ்வாண்டுக்கான பொன்விழா ஏற்பாடுகளைப் பங்குத்தந்தை பீட்டர் ராய் அடிகளார், உதவிப் பங்குத்தந்தை அருள்தாஸ் அடிகளார் தலைமையில் பங்குப் பேரவையினர் மற்றும் இறைமக்கள் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.
- Virudhunagar
தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலய பொன்விழா
விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகர் தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலய 50-வது ஆண்டு பொன்விழா திருவிழா
