விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பட்டாசு வெடி விபத்துகளில் பாதிக்கப்படும் குடும்பங்களின் நலனுக்காக மாவட்ட நிர்வாகத்தின் சிறப்புத் திட்டமான ‘உயிர் – பட்டாசு தொழிலாளர் குடும்ப நலன் மற்றும் மறுவாழ்வு அறக்கட்டளை’ தொடக்க விழா நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் என்.ஓ. சுகபுத்ரா தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் பி.செல்வம் முன்னிலையில் நடைபெற்ற இப்பட்டியலைச் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பட்டாசு வெடி விபத்துகளில் பெற்றோரை இழந்த 83 மாணவ-மாணவிகளுக்குப் புத்தகப்பைகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்களை அமைச்சர் வழங்கினார். மேலும், விருதுநகர் கல்வி அறக்கட்டளை மூலம் 4 மாணவர்களுக்கு ரூ. 18,864 மதிப்பிலான உயர்கல்வைக் கட்டணத்திற்கான காசோலைகளையும் அவர் வழங்கினார்.
பட்டாசுத் தொழிலில் எதிர்பாராத விபத்துகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்கள் மற்றும் ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களின் நீண்டகால நலன், குழந்தைகளின் கல்வி இடைநிற்றலைத் தடுத்தல், உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி வாய்ப்புகள், மருத்துவ உதவிகள் மற்றும் சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் நோக்கில் இந்த ‘உயிர்’ அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் சிவகாசி சார் ஆட்சியர் முகம்மது இர்பான், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பிர்தௌஸ் பாத்திமா, சாத்தூர் கோட்டாட்சியர் கனகராஜ், பட்டாசுத் தொழிற்சாலை நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் திரளாகக் கலந்துகொண்டனர்.
- Virudhunagar
பட்டாசு தொழிலாளர் குடும்ப நலன் – ‘உயிர்’ அறக்கட்டளை
விருதுநகரில் பட்டாசு தொழிலாளர் குடும்ப நலன் – ‘உயிர்’ அறக்கட்டளை தொடக்கம்
