சென்னையிலிருந்து மதுரை வந்த மகால் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணி ஒருவர் தவறவிட்ட 26 சவரன் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை விரைவாகச் செயல்பட்டு மீட்கப்பட்டதுடன், அவற்றை எடுத்துச் சென்ற வத்திராயிருப்பைச் சேர்ந்த கணவன்-மனைவி விருதுநகர் பேருந்து நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையிலிருந்து மதுரை வந்த மகால் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவர், மதுரைக்கு முந்தைய கூடல்நகர் ரயில் நிலையத்தில் இறங்கும்போது தனது பையைத் தவறவிட்டுள்ளார். அந்தப் பையில் 26 சவரன் தங்க நகைகளும், 50,000 ரூபாய் ரொக்கமும் இருந்துள்ளது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், கூடல்நகர் ரயில் நிலைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சந்தேகத்திற்கிடமான இருவர் பையை எடுத்துச் சென்று கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் தப்பியதைக் கண்டறிந்தனர்.
விருதுநகர் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) மற்றும் இருப்புப் பாதை போலீசாருக்கு உடனடியாகத் தகவல் பறந்தது. அதன்பேரில், ஆர்.பி.எஃப். உதவி சார்பு ஆய்வாளர் சுடலை, தலைமை காவலர் முருகன் மற்றும் ரயில்வே காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை நடத்தினர்.
சந்தேக நபர்கள் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் நோக்கிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. உடனே ஆர்.பி.எஃப். சார்பு ஆய்வாளர் சுடலை கண்ணு, சார்பு ஆய்வாளர் கார்த்திக் ரகுநாத் மற்றும் தனிப்பிரிவு தலைமை காவலர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று இருவரையும் மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டி நாடார் தெருவைச் சேர்ந்த காளியப்பன் (72) மற்றும் அவரது மனைவி சோலையம்மாள் (70) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த பையைச் சோதித்தபோது, பயணி தவறவிட்ட நகைகளும் பணமும் முழுமையாக மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட பொருட்கள் மற்றும் தம்பதியினர் மேற்கл விசாரணைக்காக மதுரை ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
- Virudhunagar
ரயிலில் தவறவிட்ட தங்க நகைகள் & ரொக்கம் மீட்பு
ரயிலில் தவறவிட்ட 26 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.50,000 ரொக்கம் மீட்பு
