மதுரை ஆனையூர் பகுதியில் கிராமத்திற்குப் பாத்தியப்பட்ட மயான நிலத்தை முஸ்லிம் சமுதாயத்திற்கு வழங்கிய உத்தரவை ரத்து செய்யக் கோரி, பொதுமக்கள் ஏராளமானோர் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளித்துள்ளனர்.
மதுரை வடக்கு வட்டம் மாநகராட்சி 3-வது வார்டுக்கு உட்பட்ட ஆனையூர் மற்றும் கூடல்புதூர் பகுதிகளில் பல்வேறு இந்து சமுதாய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். முன்னோர்கள் காலம் தொட்டு பயன்படுத்தி வரும் இந்த மயானத்தில், தற்போது அரசு சார்பில் காம்பவுண்ட் சுவரும், மின் மயானமும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இப்பகுதியில் உள்ள மஸ்ஜிதே இப்ராஹிம் பள்ளிவாசலுக்காக இந்த மயானத்தில் இருந்து 20 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இதுகுறித்து ஆட்சியரிடம் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு, அப்போதைய ஆட்சியர் பொதுமக்களிடம் பேசி அனுப்பியிருந்த நிலையில், தற்போது மீண்டும் இடம் வழங்கப்பட்டுள்ளதால் இந்து சமுதாய மக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்துக்களுக்கே போதிய இடவசதி இல்லாத நிலையில், அங்கு நிலம் ஒதுக்கினால் மதப் பிரச்சினை மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சுடுகாட்டுக்குள் அத்துமீறி நுழைந்து காம்பவுண்ட் சுவரை சேதப்படுத்திய நான்கு பேர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நிலம் வழங்கப்பட்ட உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் ஆனையூர் கிராம நிர்வாகத்தினரும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- Madurai
மயான நிலம் ஒதுக்கீடு – ஆட்சியரிடம் மனு
மயான நிலம் ஒதுக்கீடு – ஆட்சியரிடம் மனு
