தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட் தமக்கு 50 சதவீதம் ஏமாற்றம் அளிப்பதாகப் பெரியார் ஒருபோக பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்தாலும், விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான பயிர்க்கடன் தள்ளுபடி, நெல் மற்றும் கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, காய்கறிகளுக்கான அடிப்படை விலை நிர்ணயம் போன்ற முக்கிய அறிவிப்புகள் இடம்பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், நெல் கொள்முதல் நிலையங்களில் மழையிலிருந்து பாதுகாக்கத் தார்ப்பாய் வாங்குவது எந்த அளவுக்குப் பயனளிக்கும் என்ற சந்தேகமும் எழுப்பியுள்ளார்.
இருப்பினும், வான்மகள் திட்டம் மூலம் பெண்களுக்கு ட்ரோன் பயிற்சி வழங்குவது, ஊட்டி தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் மற்றும் விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைக் கொண்டுவருவது போன்ற அறிவிப்புகளை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளையில், மதுரை விவசாயிகளின் முக்கியக் கோரிக்கையான அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை திறப்பு மற்றும் முல்லைப் பெரியார் நீர் தேக்கம் தொடர்பான அறிவிப்புகள் எதும் இடம்பெறாதது மதுரை விவசாயிகளுக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும், புதிய அரசின் செயல்பாடுகளைப் பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
- Madurai
வேளாண் பட்ஜெட் 50% ஏமாற்றம்
வேளாண் பட்ஜெட் 50% ஏமாற்றம் – விவசாயிகள் சங்கம்
