விருதுநகர் அருகே பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றிச் சென்ற தனியார் வேன் கவிழ்ந்த விபத்தில் 6 மாணவர்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.
விருதுநகரில் உள்ள பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவர்களை ஏற்றிக்கொண்டு சூலக்கரையைச் சேர்ந்த பழனி என்பவருக்குச் சொந்தமான தனியார் வேன் ஆயுதப்படை வளாகம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. வேன் சூலக்கரை பகுதியில் உள்ள தனியார் ஆலை அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலப் பணிகள் நடைபெறும் இடத்தின் தடுப்புச் சுவரில் மோதித் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் யுவஹரிஷ்வரன் (14), அவரது தம்பி சபரிஸ்வரன் (13), ஜீவிதா (11), கதிர்வேலன் (12), வேதாஸ்ரீ (12), தமிழ் மாரிவேல் (7) ஆகிய 6 மாணவர்களும், வேன் ஓட்டுநரும் காயமடைந்தனர். இவர்களில் பலத்த காயமடைந்த யுவஹரிஷ்வரன் மற்றும் சபரிஸ்வரன் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்கள் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவலறிந்து விரைந்து வந்த விருதுநகர் தீயணைப்புத் துறையினர் மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து சூலக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Virudhunagar
விருதுநகர் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து
விருதுநகர் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து
