ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து, நாடு தழுவிய மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தின் ஒரு பகுதியாக மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் கட்டபொம்மன் சிலையிலிருந்து புறப்பட்ட தொழிற்சங்கத்தினரின் பேரணி ரயில் நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது. சிஐடியு, எல்பிஎஃப், ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்தன.
முக்கியக் கோரிக்கைகள்:
தொழிலாளர் விரோதக் கோட்பாடான 4 புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெற வேண்டும்.
தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.26,000 வழங்க சட்டம் இயற்ற வேண்டும்.
விவசாய விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) நிர்ணயிக்க வேண்டும்.
மின்சாரத் திருத்தச் சட்டம் மற்றும் விதைகள் சட்டம் 2025-ஐ ரத்து செய்ய வேண்டும்.
பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதைக் கைவிட வேண்டும்.
இ.பி.எஃப்-95 ஓய்வூதியதாரர்களுக்கு மாதம் ரூ.9,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
புதிய கல்விக் கொள்கையைக் கைவிட்டு, முறைசாரா தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும்.
மதுக்கூர் ராமலிங்கம் போராட்டத்தைத் தொடங்கி வைக்க, பல்வேறு தொழிற்சங்கத் தலைவர்கள் கூட்டாகத் தலைமை வகித்தனர். ஒன்றிய அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோரை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபங்களில் அடைத்தனர்.
- Madurai
ஒன்றிய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் மறியல்
ஒன்றிய அரசைக் கண்டித்து மதுரையில் தொழிற்சங்கங்கள் மறியல்
