கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு தற்காலிகமாக மட்டுமே அரசு வேலை வழங்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு இன்று உத்தரவிட்டுள்ளது.
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கக் கூடாது எனக் கோரி மனிதநேய ஜனநாயக கட்சியின் சீனி அஹமது மற்றும் நாம் தமிழர் கட்சியின் தீரன் திருமுருகன் ஆகியோர் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில், விதிகளை மீறி கருணை அடிப்படையில் பணி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது. அரசுத் தரப்பில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் சம்பவத்தை முன்னுதாரணமாகக் காட்டி வாதாடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அரசின் கொள்கை முடிவில் தலையிட விரும்பவில்லை எனக் கூறினர். எனினும், நீதிமன்றத்தின் இறுதி முடிவு வரும் வரை தற்காலிகமாகவே பணி வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, இந்த வழக்கில் டி.என்.பி.எஸ்.சி (TNPSC)-யை நீதிமன்றமே தானாக முன்வந்து சேர்த்து, வழக்கின் விசாரணையை வரும் ஜூலை 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
