விருதுநகரில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்டப் பொதுக்குழு கூட்டம், மாநிலத் தலைவர் அமிர்தக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை வலியுறுத்தி 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலத் தலைவர் அமிர்தக்குமார், ‘கடந்த 22 ஆண்டுகளாக ஊழியர்களைப் பாதிக்கும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக ரத்து செய்து, 2003-க்கு முன்பு இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்’ என்று திட்டவட்டமாகக் கோரிக்கை விடுத்தார்.
மேலும், கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும் என்றும், தனியார் வசம் உள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசு நேரடியாக ஏற்று நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுபவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதும் இவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
முதலமைச்சர் விஜய் அவர்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்று முழுமையாக நம்புவதாகவும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கிடைக்காத பட்சத்தில், அடுத்தகட்டப் போராட்டம் குறித்து மத்திய செயற்குழு கூடி முடிவெடுக்கும் என்றும் அமிர்தக்குமார் கூறினார்.
