மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை நடைபெறவுள்ள நிலையில், கும்பாபிஷேக விழாவில் தமிழ் ஓதுவார்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனவும், அவர்களைக் கருவறைக்குள் அனுமதிக்க மறுப்பதாகவும் குற்றம்சாட்டி சேலம் சத்தியபாமா தலைமையில் தமிழ் ஓதுவார்கள் கோவில் முன்பு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 10 கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, இன்று காலை பரிவார மூர்த்திகளுக்கான மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், கும்பாபிஷேக விழாவில் தமிழ் ஓதுவார்களை முழுமையாக ஓரங்கட்டிவிட்டுச் சமஸ்கிருத ஓதுவார்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகத் தெரிவித்து ஓதுவார்கள் போராட்டத்தில் குதித்தனர். அமைச்சர் தமது சமூகத்தினரைச் சேர்ந்த அர்ச்சகர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாங்கத்தின் அடிப்படையில் தேர்வான தகுதியான அர்ச்சகர்களையும் கருவறைக்குள் அனுமதிக்கவில்லை எனக் குறிப்பிட்ட ஓதுவார்கள், கும்பாபிஷேக விழாவில் சாதிய தீண்டாமை அரங்கேறுவதாகவும், இது குறித்து கோவில் இணை ஆணையர் தரப்பில் முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை எனவும் ஆவேசமாகத் தெரிவித்தனர்.
- Madurai
தமிழ் ஓதுவார்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக ஆர்ப்பாட்டம்
தமிழ் ஓதுவார்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகக் கூறி ஆர்ப்பாட்டம்
