விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று ஆய்வு செய்தார்.
இந்தக் கூட்டத்தில், அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு மொத்தம் 14 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சித்தலைவர் வழங்கினார். குறிப்பாக, ‘உயிர்’ திட்டத்தின் கீழ் தேநீர் கடை அமைக்க உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு மின்கல மூன்று சக்கர நாற்காலிகள், மற்றும் பணியின்போது உயிரிழந்தவரின் வாரிசுதாரருக்குப் பணி நியமன ஆணை ஆகியவற்றை அவர் வழங்கினார்.
மேலும், தீண்டாமை ஒழிப்பு மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் போற்றும் விதமாக, சாத்தூர் வட்டம் நள்ளி ஊராட்சிக்குக் கிராம வளர்ச்சிக்காக 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை வழங்கினார். கோவிட் தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்குப் பாடக் குறிப்பேடுகளும், திறன் மேம்பாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இன்று ஒரே நாளில் பொதுமக்களிடமிருந்து 694 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், அனைத்து மனுக்களையும் விரைவாகப் பரிசீலித்துத் தீர்வு காணுமாறு துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார்.
