மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் இன்று நடைபெற இருந்த நிலையில், மாநகராட்சி அலுவலகம் முன்பு கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
62-வது வார்டு கவுன்சிலர் ஜெயச்சந்திரன் தலைமையில், அப்பகுதி பொதுமக்கள் இன்று மாநகராட்சி அண்ணா மாளிகை நோக்கி ஊர்வலமாக வந்தனர். “மதுரை மாநகரமே குப்பை நகரமாக மாறிவிட்டது”, குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி நிர்வாகத்தையும், ஒப்பந்த நிறுவனமான அவர்லேண்ட் நிறுவனத்தையும் கண்டித்து கடும் கோஷங்களை எழுப்பினர்.
மாநகராட்சி அலுவலக வாயிலுக்குள் நுழைய முயன்றபோது, அங்கிருந்த போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. “பொதுமக்களை வஞ்சிக்காதே” என முழக்கமிட்டபடி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களை போலீசார் கைது செய்தனர். மாமன்ற கூட்டம் நடைபெறவிருந்த சூழலில் நடந்த இந்த போராட்டம் மாநகராட்சி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
