கர்மவீரர் காமராஜரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு, திண்டுக்கல்லில் காங்கிரஸ் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தினர் இணைந்து ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மலர் வணிக வளாகம் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு, மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மணிகண்டன் தலைமையிலான காங்கிரசாரும், தமிழக வெற்றிக் கழகத்தின் திண்டுக்கல் கிழக்கு மாவட்டத் தலைவர் தர்மர் தலைமையிலான தவெக நிர்வாகிகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, “லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்” என்ற முழக்கத்துடன், ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு இயக்கத்தை அவர்கள் தொடங்கி வைத்தனர். இதற்காக வைக்கப்பட்டிருந்த பிரத்யேகப் பதாகைகளில், இரு கட்சிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்கள் கைரேகைகளைப் பதிவு செய்து, ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்க உறுதிமொழி ஏற்றனர். காமராஜரின் பிறந்தநாளை மக்கள் இயக்கமாக மாற்றும் வகையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திண்டுக்கல் பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது
