பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது பிறந்த மண்ணான விருதுநகர் விழாக்கோலம் பூண்டுள்ளது. இதையொட்டி, மதுரை ரோட்டில் அமைந்துள்ள காமராஜர் மணிமண்டபம் வண்ணமயமான மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்து வருகிறது. அதேபோல், நகராட்சி அலுவலகம் மற்றும் காமராஜர் நினைவு இல்லமும் மலர்களாலும் மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப் பள்ளியில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் கல்வித் திருவிழா நடைபெற்றது. சங்கத்தின் பொதுச்செயலாளர் கரிக்கோல் ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து திருவிளக்கேற்றி வழிபாடு செய்தனர். மேலும், கல்லூரி மாணவிகளின் கும்மிப்பாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
“பள்ளிக்கூடங்களை உருவாக்கியவர், பசி தீர்த்த வள்ளல், ஊழலற்ற ஆட்சியைத் தந்த தலைவர்” எனப் பல பெருமைகளைக் கொண்ட காமராஜரின் பிறந்தநாளை, விருதுநகர் மக்கள் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
