உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில், அம்மனுக்கு மட்டுமே உரிய சிறப்பான ஆடி முளைக்கொட்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
“ஆடிப்பட்டம் தேடி விதை” என்ற பழமொழிக்கு ஏற்ப, விவசாயப் பணிகள் சிறக்கவும், பயிர்கள் அமோக விளைச்சல் பெறவும் வேண்டி இந்தத் திருவிழா நடத்தப்படுகிறது. இன்று காலை அலங்கரிக்கப்பட்ட அம்மன் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில், வேத மந்திரங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்கிடக் கொடியேற்றம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக மீனாட்சி அம்மன் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தர்கள் இந்தத் திருவிழாவில் பங்கேற்று அம்மனைத் தரிசனம் செய்தனர்.
இன்று தொடங்கிய இந்தத் திருவிழா தொடர்ந்து 10 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. விழா நாட்களின் காலை மற்றும் மாலை வேளைகளில், மீனாட்சி அம்மன் பஞ்சமூர்த்திகளுடன் கோயில் ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார்.
விழாவின் முக்கிய நிகழ்வான மாலை மாற்றும் பூஜை வரும் 22-ஆம் தேதி மாலை நடைபெறவுள்ளது. இந்த ஆடி முளைக்கொட்டு உற்சவத்தின் மூலம் விவசாயம் செழித்து, நாடு நலம் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
