விருதுநகர் மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில், கலை பண்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் 15 கலைஞர்களுக்கு மாவட்ட கலை விருதுகளையும், மொத்தம் 1.65 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ. சுகபுத்ரா வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர், பாரம்பரிய கலைகளைப் பாதுகாத்து இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாகத் தெரிவித்தார்.
விழாவில் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன:
கலை இளமணி விருது பெற்ற மூன்று பேருக்கு தலா ரூ.4,000/- வழங்கப்பட்டது.
கலை வளர்மணி விருது பெற்ற மூன்று பேருக்கு தலா ரூ.6,000/- வழங்கப்பட்டது.
கலை சுடர்மணி விருது பெற்ற மூன்று பேருக்கு தலா ரூ.10,000/- வழங்கப்பட்டது.
கலை நன்மணி விருது பெற்ற மூன்று பேருக்கு தலா ரூ.15,000/- வழங்கப்பட்டது
.
கலை முதுமணி விருது பெற்ற மூன்று பேருக்கு தலா ரூ.20,000/- வழங்கப்பட்டது.
பரிசுத்தொகையுடன் விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் மற்றும் ஓவிய, சிற்பக் கண்காட்சிகளில் வெற்றி பெற்ற மொத்தம் 42 நபர்களுக்குக் கேடயங்களும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் து. சிவப்புகழ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.கொ. நாகராஜ பூபதி மற்றும் அரசு அலுவலர்கள், கலைஞர்கள் பலர் கலந்துகொண்டனர். மாவட்டத்திலுள்ள கலைஞர்களை ஊக்குவிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும் என ஆட்சியர் உறுதியளித்தார்.
