தொடக்க மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நியாயவிலைக் கடை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓய்வு பெற்றோர் சங்க மாவட்டத் தலைவர் திருச்சிற்றம்பலம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தாயுமானவர் திட்டத்தில் உள்ள நடைமுறை சிக்கல்களைக் கலைவது, புதிய ஊதியத்தை நிபந்தனையின்றி வழங்குவது, பணி நிறைவு நாளிலேயே நிதி பலன்களை வழங்குவது, 2021-க்குப் பிறகு ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதியம் வழங்குவது மற்றும் கணினிப் பணியாளர்களை நிரந்தரப்படுத்துவது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன.
இந்தக் கோரிக்கைகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் கூட்டுறவு சங்க மற்றும் பொது விநியோகத் திட்டப் பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் முழுமையாக ஈடுபடுவார்கள் என்று சங்க நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.
