மதுரை பெத்தானியாபுரம் பகுதியில், அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ (We The Leaders) அமைப்பு சார்பாக “போதை இல்லா தமிழகம்” என்ற முழக்கத்தை முன்வைத்து நூதன முறையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கண்ணன் என்பவரின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது மதுபான வடிவத்திலான பதாகைக்குச் செருப்பு மாலை அணிவித்து, முற்றிலும் மதுவை ஒழிக்க வேண்டும் மற்றும் இன்றோடு மதுவைக் கைவிட வேண்டும் என்ற கோஷங்களுடன் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டு, பொதுமக்கள் மதுவைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்குப் பின் பேசிய கண்ணன், முதல் ஆண்டில் 33 சதவீத மதுக்கடைகளை மூடுவோம் என்று அண்ணாமலை கூறியது கண்டிப்பாக சாத்தியமாகும் என்றும், இந்த மாதம் முழுவதும் போதை இல்லா தமிழகம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும்,
அடுத்த மாதம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நோக்கில் செயல்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
மதுவை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வீ த லீடர்ஸ் அமைப்பினர் நடத்திய இந்த விழிப்புணர்வு மற்றும் நூதனப் போராட்டம் அப்பகுதியில் மக்களிடையே கவனம் ஈர்த்தது.
