விருதுநகர் அருப்புக்கோட்டை ரோடு மேம்பாலம் வடக்குப் புறம் அமைந்துள்ள அணுகுசாலையில், கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சாக்கடைக் கழிவுகள், குப்பைகள் மற்றும் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்பட்டு வந்தன. இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசியதுடன், அவ்வழியாகப் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
மேலும், இங்கு கொட்டப்படும் குப்பைகளுக்கு அடிக்கடி தீ வைக்கப்படுவதால், பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் புகைமூட்டத்தால் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்துப் பலமுறை கோரிக்கைகள் விடுக்கப்பட்டும் நகராட்சி நிர்வாகம் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, விருதுநகர் நெக்ஸ்ரா நிறுவனம், ரோட்டரி கிளப் ஆஃப் விருதுநகர் கிங்டம், இன்னர் வீல் அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து களத்தில் இறங்கினர்.
நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஜேசிபி இயந்திரங்களின் உதவியுடன் தேங்கிக் கிடந்த குப்பைகள் முழுமையாக அகற்றப்பட்டு வருகின்றன. இப்பகுதி விரைவில் முற்றிலும் சுத்தம் செய்யப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு முழுமையாகக் கொண்டுவரப்படும் என்று நெக்ஸ்ரா நிறுவனத்தின் தலைவர் பால விக்னேஷ் தெரிவித்துள்ளார். மக்களின் நலன் காக்கும் இந்தச் சமூகப் பணியை அப்பகுதி மக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
- Virudhunagar
தேங்கிக் கிடந்த குப்பைகளை அகற்றும் பணி
பல வருடங்களாக தேங்கிக் கிடந்த குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்
