மதுரை மாவட்டம் ராஜாக்கூர் காளியம்மன் கோவில் ஆடித் திருவிழாவில், பிரபல நடிகர்கள் சூரி மற்றும் விமல் ஆகியோர் ஒயிலாட்டக் கலைஞர்களுடன் இணைந்து உற்சாகமாக நடனமாடிய நிகழ்வு ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
மதுரை மாவட்டம் ராஜாக்கூர் கிராமம், பிரபல நடிகர் சூரியின் சொந்த ஊராகும். இங்குள்ள அருள்மிகு காளியம்மன் கோவில் ஆடித் திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டிற்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், காப்புக் கட்டுதல், முளைப்பாரி எடுத்தல் மற்றும் அம்மன் வீதி உலா போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான முளைப்பாரி ஊர்வலம் நேற்று இரவு நடைபெற்றது. இதில், நடிகர் சூரி மற்றும் நடிகர் விமல் இருவரும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர். அப்போது கிராமியக் கலைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், ஒயிலாட்டக் கலைஞர்களுடன் இணைந்து இருவரும் உற்சாகமாக நடனமாடினர்.
தங்கள் ஊர் திருவிழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுடன் இயல்பாகப் பழகியதும், நடனமாடியதும் கிராம மக்களுக்கும் ரசிகர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
- Madurai
ராஜாக்கூர் காளியம்மன் திருவிழா
ராஜாக்கூர் காளியம்மன் திருவிழா – சூரி, விமல் நடனம்
