தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தக் கோரியும், புதிய விண்ணப்பங்களுக்கு உடனடியாக உதவித்தொகை ஆணைகளை வழங்க வலியுறுத்தியும், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் பாலமுருகன் தலைமையில் திரளான மாற்றுத்திறனாளிகள் ஆட்சியர் அலுவலகம் முன்பு பதாகைகளை ஏந்தி, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியவாறு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர்.
கைதான மாற்றுத்திறனாளிகளை அழைத்துச் செல்ல வந்த அரசுப் பேருந்தில், தாழ்தளப் படிக்கட்டுகள் மற்றும் சரிவுப் பலகைகள் மூலம் அவர்கள் ஏறுவதற்குப் பேருந்து ஓட்டுநரும் நடத்துனரும் கை கொடுத்து உதவிய நெகிழ்ச்சியான நிகழ்வு காண்போரைப் பாராட்டச் செய்தது.
செய்தியாளர்களிடம் பேசிய மாவட்டச் செயலாளர் பாலமுருகன், ஆந்திரா போன்ற மாநிலங்களில் அதிக உதவித்தொகை வழங்கப்படும் நிலையில், தமிழகத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுக்கு மனமில்லை எனக் குற்றம் சாட்டினார். மேலும், "எம்.எல்.ஏ.க்களுக்குக் கார் வாங்கவும், புதிய சட்டமன்றம் கட்டவும் நிதி இருக்கும்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க மட்டும் நிதி இல்லையா?" என அவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.
- Madurai
மாற்றுத்திறனாளிகள் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம்
மதுரையில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம்
