மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கோவிலில் உள்ள அனைத்து ராஜகோபுரங்கள் மற்றும் தங்க கோபுரங்கள் உள்பட 12 கோபுரங்களிலும் சுமார் 5 டன் எடையிலான பிரம்மாண்ட வண்ண மலர் மாலைகள் சாற்றும் பணி நடைபெற்று வருகிறது.
அன்னை மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரர் தங்க கோபுரங்கள் உள்ளிட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ராஜகோபுரங்கள் என மொத்தம் 12 கோபுரங்களுக்கும் சாற்றுவதற்கான பிரம்மாண்ட மலர் மாலைகள் கடந்த இரண்டு நாட்களாகப் புதுமண்டபம் பகுதியில் தயாரிக்கப்பட்டு வந்தன. இந்த மாலைகள் சுமார் 40 அடி முதல் 122 அடி நீளம் கொண்டவையாக உருவாக்கப்பட்டுள்ளன.
கோபுரங்களின் உச்சிக்கு மாலைகளைக் கொண்டு சென்று சாற்றும் பணிக்கு முன்பாக, அம்மன் சன்னதி வாசலில் உள்ள அஷ்டசக்தி மண்டபத்தில் அமைந்துள்ள வல்லப விநாயகருக்கு மலர் மாலை சாற்றி சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து வடக்கு கோபுரம் அருகே உள்ள ஸ்ரீ மகா முனீஸ்வரர் ஆலயத்திலும் சிறப்பு தரிசனம் செய்யப்பட்டது.
கிழக்கு ராஜகோபுரத்தில் முதல் மலர் மாலையை உச்சிக்கு ஏற்றும் பணி தொடங்கியது. புதுமண்டபத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட இந்த மாலைகளை, ஒன்பது நிலைகளைக் கொண்ட கிழக்கு ராஜகோபுரம் மற்றும் இதர 12 கோபுரங்களிலும் சாற்றும் பணியில் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
- Madurai
கும்பாபிஷேகம் – கோபுரங்களில் மலர் மாலைகள் சாற்றும் பணி
மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம் – 12 கோபுரங்களிலும் மலர் மாலைகள் சாற்றும் பணி
