விநாயகர் சதுர்த்தி திருநாளான இன்று, அசாம் மாநிலத்திலிருந்து சுமார் 3,000 கிலோமீட்டர் நீண்ட பயணம் மேற்கொண்டு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு 'துர்கா' என்ற 5 வயது பெண் யானை கொண்டுவரப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களுக்காக அசாம் மாநிலத்தில் இருந்து 5 யானைகள் வாங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ‘பார்வதி’ என்ற பெண் யானை உள்ள நிலையில், தற்போது 'துர்கா' என்ற 5 வயது பெண் யானை புதிதாக அழைத்து வரப்பட்டுள்ளது. சமீபத்தில் ஒட்டகம் ஒன்றும் கோயிலுக்குக் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கோயில்களுக்குப் புதிதாக யானைகள் வாங்கவோ அல்லது தானமாகப் பெறவோ கூடாது எனத் தனி நீதிபதி விதித்திருந்த தடையை சென்னை உயர் நீதிமன்ற அமர்வு அண்மையில் ரத்து செய்து உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து, அசாமில் உள்ள மானஸ் தேசிய பூங்காவில் இருந்து 'துர்கா' யானையை மதுரைக்கு அழைத்துவர வனத்துறை முறைப்படி ஒப்புதல் அளித்தது.
அசாமில் இருந்து பிரத்யேக வாகனத்தில் 3,000 கி.மீ. பயணம் செய்து இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தடைந்த குட்டி யானை துர்காவுக்கு, விநாயகர் சதுர்த்தி தினமான இன்று கோயில் பணியாளர்களும் திரளான பக்தர்களும் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- Madurai
மீனாட்சி அம்மன் கோயிலுக்கு 5 வயது பெண் யானை வருகை
அசாமிலிருந்து மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ‘துர்கா’ என்ற 5 வயது பெண் யானை வருகை
