மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் வருகிற செப்டம்பர் 17-ஆம் தேதி திருக்குடமுழுக்கு விழா நடைபெற உள்ள நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு தீ விபத்தில் சேதமடைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வீர வசந்தராயர் மண்டபம் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
கடந்த 2018 பிப்ரவரி 2 அன்று ஏற்பட்ட தீ விபத்தில் பெரும்பகுதி சேதமடைந்த இம்மண்டபம், ரூ.38.30 கோடி மதிப்பீட்டில் பாரம்பரிய மாறாமல் புனரமைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு, கூடல்செங்குளம் பண்ணையில் ஸ்தபதி வி.பி.வேல்முருகன் தலைமையில் சிற்ப வேலைப்பாடுகள் செய்யப்பட்டு 79 தூண்களுடன் கம்பீரமாக மீண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, கடந்த 28-ஆம் தேதி முதல் வீர வசந்தராயர் மண்டபத்தில் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்தன. இன்று நடைபெற்ற சிறப்புப் பூஜைகள் மற்றும் மண்டப பிரதிஷ்டை விழாவைத் தொடர்ந்து, வீர வசந்தராயர் மண்டபம் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது.
இத்திறப்பு விழாவைத் தொடர்ந்து, கடந்த 8 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கிழக்கு ராஜகோபுர வாசல் வழியாகவும் பக்தர்கள் மீண்டும் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நீண்ட நாட்களுக்குப் பிறகு கிழக்குக் கோபுரப் பகுதி பக்தர்கள் நடமாட்டத்துடன் களைகட்டியுள்ளது.
வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள கும்பாபிேஷகத்திற்கு முன்னதாக, வீர வசந்தராயர் மண்டபம் பாரம்பரிய கட்டிடக்கலையின் சிறப்போடு மீண்டும் திறக்கப்பட்டிருப்பது மதுரை மக்களிடையேயும் பக்தர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- Madurai
வீர வசந்தராயர் மண்டபம் & கிழக்கு ராஜகோபுரம் திறப்பு
மீனாட்சி அம்மன் கோயில் – 8 ஆண்டுகளுக்குப் பிறகு வீர வசந்தராயர் மண்டபம் & கிழக்கு ராஜகோபுரம் திறப்பு
