மதுரை திருமங்கலம் பகுதியில் அமைச்சர் நிர்மல் குமாரின் பெயரைக் கூறி பொதுவழிப்பாதை மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து மனமகிழ் மன்றம் நடத்திவரும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் செங்குளம் 2-வது கிழக்குத் தெரு பகுதியில், பாண்டி என்பவர் பொதுவழிப்பாதை மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து மனமகிழ் மன்றம் நடத்தி வருவதாகவும், புனரமைப்பு என்ற பெயரில் பொதுப்பாதைகளை வேலி போட்டு அடைத்துள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இது குறித்துக் கேள்வி கேட்கும் பொதுமக்களை, தான் தவெக கட்சியைச் சேர்ந்தவராகவும், அமைச்சர் நிர்மல்குமாரின் பினாமி எனவும் கூறி மிரட்டுவதாகவும், நில அளவை அதிகாரிகளைக்கூட அளவீடு செய்ய விடாமல் தடுத்து வருவதாகவும் வேதனை தெரிவித்தனர். மேலும், நெடுஞ்சாலைத்துறை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டு ஒரு வருடமாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர்.
பொதுமக்களின் தொடர் புகாரைத் தொடர்ந்து, வட்டாட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் இணைந்து சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து அவற்றை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
- Madurai
மனமகிழ் மன்றம் நடத்தும் நபர் மீது நடவடிக்கை கோரி மனு
அமைச்சர் பெயரைக் கூறி மனமகிழ் மன்றம் நடத்தும் நபர் மீது நடவடிக்கை கோரி மனு
