வரும் அக்டோபர் மாதம் தஞ்சாவூரில் நடைபெறவுள்ள மாநில அளவிலான ஏரோஸ்கேட்டோபால் போட்டிக்குத் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து வீரர், வீராங்கனைகளைத் தேர்வு செய்வதற்கான மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
8-வது மாவட்ட அளவிலான ஏரோஸ்கேட்டோபால் சாம்பியன்ஷிப் போட்டியான இதில், திண்டுக்கல் மாவட்டம் முழுவதிலும் உள்ள பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
4 வயது குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை பங்கேற்ற இப்போட்டி, வயது அடிப்படையில் தனித்தனியாக நடத்தப்பட்டது. இதில் ஒரு நிமிட ரேஸ், ஜிக் ஜாக் மற்றும் ரோல் பால் ஆகிய மூன்று முக்கிய பிரிவுகளின் கீழ் தனிநபர் மற்றும் குழுப் போட்டிகளாக மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
தலைமை பயிற்சியாளர்கள் தங்க முருகன் மற்றும் வினோத் குமார் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில், நடுவர்கள் அமல் ஜோயல் மற்றும் பிரவீன் ஜோன்ஸ் ஆகியோர் தகுதியின் அடிப்படையில் திறமையான வீரர், வீராங்கனைகளை மாநிலப் போட்டிக்குத் தேர்வு செய்தனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்குப் பரிசுக் கோப்பைகளும் பதக்கங்களும் வழங்கி கவுரவிக்கப்பட்டன.
- Dindigul
மாநில அளவிலான ஏரோஸ்கேட்டோபால் போட்டி
மாநில அளவிலான ஏரோஸ்கேட்டோபால் போட்டிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு
