பழனி அருள்மிகு இடும்பன் மற்றும் ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில்களில் பல லட்சம் மதிப்புள்ள தங்க மற்றும் வெள்ளி நகைகள் மாயமான வழக்கில் குற்றவாளிகள் யாரும் இதுவரை கண்டறியப்படாத நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பழனிக்கு நேரில் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டார்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் உபகோயில்களான இடும்பன் மற்றும் ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில்களில் கடந்த மே மாதம் நடைபெற்ற ஆய்வின்போது, பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த 52 கிராம் வெள்ளி வேல் மற்றும் 142 கிராம் மதிப்பிலான பல்வேறு தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது. இது தொடர்பாக அப்போதைய செயல் அலுவலர் விமலா மீது பழனி நகரக் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வழக்குப் பதிவு செய்யப்பட்டு மாதங்கள் பல கடந்தும் காவல்துறையினர் எவ்வித துப்பும் துலக்காததால், பரம்பரை அறங்காவலர் ஏ. ராஜா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை அணுகினார். நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) ஜெயக்குமார் இன்று பழனி இடும்பன் திருக்கோயில் அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்தார்.
நகைகள் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறை, லாக்கர் பெட்டகங்கள், சாவி பராமரிப்பு முறை மற்றும் சம்பந்தப்பட்ட பதிவேடுகளை அவர் மிகத் தீவிரமாக ஆய்வு செய்தார். மேலும், இச்சம்பவம் தொடர்பாகக் கோயில் நிர்வாகிகள் மற்றும் அப்போதைய ஊழியர்களிடமும் அவர் நேரில் விசாரணை நடத்தினார்.
- Dindigul
இடும்பன் கோயில் நகை திருட்டு வழக்கு – எஸ்.பி நேரில் விசாரணை
பழனி இடும்பன் கோயில் நகை திருட்டு வழக்கு – எஸ்.பி நேரில் விசாரணை
