திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மற்றும் குஜிலியம்பாறை பகுதி மக்களின் முக்கிய நீராதாரமான குடகனாற்றில் நரசிங்கபுரம் பகுதியில் முறைகேடாகக் கட்டப்பட்ட தடுப்புச்சுவரை உடனடியாக அகற்றக் கோரி, குடகனாறு பாதுகாப்பு சங்கம் மற்றும் விவசாயிகள் சார்பில் வேடசந்தூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி கரூர் வரை பாயும் குடகனாற்றின் ராஜவாய்க்காலில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நரசிங்கபுரம் பகுதியில் முறைகேடாக 7 மீட்டருக்கு 2 அடி அளவில் தடுப்புச் சுவர் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் வேடசந்தூர் பகுதிக்கு வர வேண்டிய தண்ணீர் மடைமாற்றம் செய்யப்பட்டு, அப்பகுதி வறண்டு காணப்படுவதுடன் விவசாயமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
முறைகேடான தடுப்புச்சுவரை அகற்றக்கோரி வல்லுநர் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியில் குடகனாறு பாதுகாப்புச் சங்கத் தலைவர் ராமசாமி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகளும், பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகளும் திரளாகக் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்களிடம் பேசிய சங்கத் தலைவர் ராமசாமி, பல ஆண்டுகளாகக் குடிநீரும் விவசாயமும் இன்றிப் பாதிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டுத் தடுப்புச்சுவரை அகற்றாவிட்டால், பெருந்திரளான விவசாயிகளைத் திரட்டி நாங்களே அந்தத் தடுப்புச்சுவரை உடைத்தெறிவோம் என எச்சரிக்கை விடுத்தார்.
- Dindigul
வேடசந்தூரில் குடகனாறு பாதுகாப்பு சங்கம் போராட்டம்
வேடசந்தூரில் குடகனாறு பாதுகாப்பு சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்
