மதுரையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, பைபாஸ் சாலையில் உள்ள குரு தியேட்டர் முதல் பொன்மேனி வரை நீடித்திருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சியும், நெடுஞ்சாலைத்துறையும் இணைந்து அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டன.
இப்பணியை மாநகராட்சி ஆணையாளர் கெளரவ்குமார் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார். சாலையோரங்களில் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த கடைகள், தற்காலிக கட்டிடங்கள், விளம்பர பலகைகள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மேற்கூரைகள் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடித்து அகற்றப்பட்டன. காவல்துறை பாதுகாப்போடு இப்பணிகள் நடைபெற்றன.
சாலையின் அகலத்தை முழுமையாகப் பயன்படுத்துவதன் மூலம் வாகன நெரிசலைக் குறைப்பதோடு, வரும் காலங்களில் மழைநீர் வடிகால் மற்றும் சாலை மேம்பாட்டுப் பணிகளைத் தடையின்றி மேற்கொள்ள இது வழிவகை செய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள அதிகாரிகள், அரசின் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுமாறு சாலையோர வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் அறிவுறுத்தியுள்ளனர்.
