திண்டுக்கல் மாவட்ட காவல்துறை மற்றும் ‘இணைவோம் இயக்கம்’ இணைந்து நடத்திய மாபெரும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி இன்று காலை விமரிசையாக நடைபெற்றது. திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த பேரணியை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்தப் பேரணியில் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் போதைக்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர். மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரும் அவர்களுடன் இணைந்து சாலையில் நடந்து சென்று, பொதுமக்களுக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.
பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு ஊர்வலம் டட்லி பள்ளி, தமிழ் சாலை, காந்தி மார்கெட் ரோடு வழியாகச் சென்று திருப்பூர் குமரன் நினைவு பூங்காவில் நிறைவடைந்தது.
