மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நடைபெற்ற ‘ஜனநாயகன்’ திரைப்பட வழக்கு விசாரணையின் போது, படத்தில் பாப்பாபட்டி கிராமம் குறித்துச் சித்தரிக்கப்பட்டுள்ள காட்சிகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் அவை கிராமத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்துவதாகவும் கிராம மக்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தேர்தல் புறக்கணிப்பு நடந்தது உண்மைதான் என்றாலும், அதற்கான காரணமாகப் படத்தில் காட்டப்பட்டுள்ள காட்சிகள் யாவும் தவறானவை என்றும், உரிய விசாரணை நடத்தாமலேயே மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு இப்படத்திற்குச் சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் மனுதாரர்கள் வாதிட்டனர். பட்த்தில் "பாப்பம்பட்டி" என்றே குறிப்பிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
மேலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இடஒதுக்கீட்டுக்கும் எதிராகக் கிராம மக்கள் செயல்படுவது போலவும், வன்முறையில் ஈடுபட்டது போலவும் எந்த ஒரு வழக்கோ ஆதாரமோ இல்லாத நிலையில், அனைத்து சமூக மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் தங்கள் கிராமத்தை அவதூறாகச் சித்தரித்துள்ளதாக அவர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், தணிக்கைக் குழுத் தலைவர், மண்டல அலுவலர், தயாரிப்பாளர் வெங்கட் நாராயணன் மற்றும் இயக்குநர் வினோத் ஆகியோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
- Madurai
ஜனநாயகன் – பாப்பாபட்டி கிராமத்திற்கு அவப்பெயர்
ஜனநாயகன் ‘ திரைப்படம் பாப்பாபட்டி கிராமத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்துகிறது – கிராம மக்கள் குற்றச்சாட்டு
