விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில், தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி ஆகியோர் இணைந்து ரூ.49.70 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய 'முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு அரங்கத்தை' திறந்து வைத்தனர்.
மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் பி. செல்வம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ. கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர்களை நல்வழிப்படுத்தி ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாக்ஸ் கிரிக்கெட் ஆடுகளம் காலை 7.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு வீரர்கள் 'TURF TOWN MOBILE APP' என்ற செயலி மூலம் தங்களுக்கான நேரத்தைப் பதிவு செய்து கொள்ளலாம் என்றும், இதற்கான கட்டணம் ஜி.எஸ்.டி.யுடன் ஒரு மணி நேரத்திற்கு ரூ.826 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. சிறு வயது முதலே இளைஞர்கள் ஏதேனும் ஒரு விளையாட்டில் தொடர் பயிற்சி பெற்று உடல் ஆரோக்கியத்தையும் மன வலிமையையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர்கள் கேட்டுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் குமாரமணிமாறன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
- Virudhunagar
முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு அரங்கம் திறப்பு
முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு அரங்கம் அமைச்சர்கள் ச.கீர்த்தனா & கு.ஜெகதீஸ்வரி திறந்து வைத்தனர்
