திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு நடைபெற்ற வாரச்சந்தையில், ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தின் புகழ்பெற்ற செம்பட்டி ஆட்டுச் சந்தை, வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் கூடுகிறது. இங்கு உள்ளூர் விவசாயிகள் மட்டுமின்றி, மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் ஆடு வர்த்தகத்திற்காக அதிகளவில் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், இன்று ஆடி வெள்ளி மற்றும் ஆடிப்பெருக்கு பண்டிகை நாட்கள் என்பதால், செம்பட்டி ஆட்டுச்சந்தை வழக்கத்தை விட மிகக் களைகட்டியது.
அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான விவசாயிகளும் வியாபாரிகளும் குவிந்ததால் சந்தையில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. சந்தைக்குள் இடவசதி இல்லாத காரணத்தினால், வியாபாரிகள் சாலையோரங்களிலும் ஆடுகளை விற்பனை செய்யும் நிலை உருவானது.
பண்டிகைக் கொண்டாட்டங்கள் மற்றும் குலதெய்வ வழிபாட்டிற்காக மக்கள் ஆர்முடன் ஆடுகளை வாங்கிச் சென்றதால், இன்றைய ஒரே நாளில் மட்டும் சுமார் 1 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
- Dindigul
செம்பட்டி ஆட்டுச் சந்தை
செம்பட்டி ஆட்டுச் சந்தையில் ரூ. 1 கோடி விற்பனை
