மதுரையில் காவல்துறையினர் தாக்கியதால் உயிரிழந்ததாகக் கூறப்படும் பூசாரி பரமசிவம் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, அரசு வேலை மற்றும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்த பூசாரி பரமசிவம் (55) குடும்பத்தினருக்கும் அண்டை வீட்டாருக்கும் இடையே வாகனம் நிறுத்துவது தொடர்பாக கடந்த ஜூலை 17-ல் தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாகச் சிந்தாமணி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறையினரிடம் இது குறித்துக் கேள்வி எழுப்பிய பரமசிவத்தைச் சிந்தாமணி காவல் நிலையப் போலீசார் தாக்கியுள்ளனர். இதனால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.
பரமசிவத்தின் உயிரிழப்புக்குக் காவல்துறையினர் தாக்கியதே காரணம் எனக் குடும்பத்தினர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, நடுவர்மன்ற நீதிபதி லட்சுமிபிரியா உடற்கூராய்வு விசாரணையைக் கண்காணித்தார்.
ஆட்சியரிடம் மனு: பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீதும், ஆய்வாளர் பாஸ்கரன், சார்பு ஆய்வாளர் ஜெயக்குமார் மற்றும் காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடும் அரசு வேலையும் வழங்க வேண்டும் எனக் கோரி உயிரிழந்த பரமசிவத்தின் குடும்பத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர்.
- Madurai
பூசாரி குடும்பத்தினருக்கு நீதி கோரி மனு
பூசாரி பரமசிவம் குடும்பத்தினருக்கு நீதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
