சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் தொடங்கிய 'மக்கள் மேடை' மக்கள் இயக்கத்தின் முதல் நேரடி உறுப்பினர் சேர்க்கை மற்றும் விண்ணப்பப் படிவ அறிமுக நிகழ்ச்சி மதுரையில் மிகச் சிறப்பாகத் தொடங்கப்பட்டுள்ளது.
இதுவரை ஆன்லைன் மூலமாக மட்டும் செயல்பட்டு வந்த 'மக்கள் மேடை' இயக்கத்தின் நேரடி உறுப்பினர் சேர்க்கை முகாம் மதுரையில் நடைபெற்றது. இதில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளான ஜாபர், குமரவேல், பால நமச்சிவாயன், அழகர்சாமி, பால தம்புராஜ், சரவணன், பாலா முத்துப்பாண்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டு உறுப்பினர் படிவங்களை வழங்கித் தொடக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியின் போது மன்ற நிர்வாகிகளுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய லதா ரஜினிகாந்த், இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்தும், மதுரையில் நடைபெறவுள்ள மண்டல மாநாடு குறித்தும் நலம் விசாரித்து ஆலோசனை நடத்தினார். அப்போது நிர்வாகிகள் அவரை "அம்மா" என அன்போடு அழைத்து உற்சாக வெளிப்பாட்டைத் தெரிவித்தனர்.
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மக்கள் மேடை இயக்க நிர்வாகிகள், "தமிழகத்தில் உள்ள அனைத்து நடிகர்களும் ரஜினி ரசிகர்கள் தான், முதலமைச்சர் விஜயும் ரஜினி ரசிகர்தான்" எனக் குறிப்பிட்டனர். மேலும், வைகை - குண்டாறு - காவிரி நதி இணைப்பு, பசுமைத் தாயகம் உருவாக்குவது, ஆதரவற்ற குழந்தைகளை மீட்டல் மற்றும் பெண்கள் பாதுகாப்பு போன்ற சமூக நலப் பணிகளில் இவ்வமைப்பு தீவிரமாகச் செயல்படும் என்றும், அடுத்த மாதம் மதுரையில் லதா ரஜினிகாந்த் தலைமையில் பிரம்மாண்டமான மண்டல மாநாடு நடைபெறவுள்ளதாகவும் அறிவித்தனர்.
- Madurai
லதா ரஜினிகாந்தின் ‘மக்கள் மேடை’ இயக்கம்
லதா ரஜினிகாந்தின் ‘மக்கள் மேடை’ இயக்கம் – நேரடி உறுப்பினர் சேர்க்கை
