மதுரை பரவை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 'சர்தார் 2' திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர்கள் கார்த்தி, எஸ்.ஜே. சூர்யா மற்றும் நடிகை மாளவிகா மேனன் ஆகியோர் கலந்துகொண்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.
இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'சர்தார் 2' திரைப்படம் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியாகிறது. முதல் பாகத்தைப் போலவே இப்படத்திலும் சமூக விழிப்புணர்வு சார்ந்த பல சுவாரஸ்யமான விஷயங்கள் மற்றும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டுத் தியேட்டர் விசிட்டிற்காக மதுரை வந்த தங்களுக்கு மாணவர்கள் கொடுத்த வரவேற்பு மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் கார்த்தி தெரிவித்தார்.
"அரசியல் நமக்கு எதற்கு? நடிப்பில் மக்களைச் சந்தோஷப்படுத்துவோம், ஹிட் கொடுப்போம்; அந்த வேலையைச் செய்வோம்" எனத் தெரிவித்த நடிகர் கார்த்தி, திரைப்படங்கள் உடனடியாக இணையதளத்தில் கசிவது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, திரைத்துறையைச் சேர்ந்த தமிழக முதல்வருக்கு இதைப் பற்றி நன்றாகப் புரியும் என்பதால் அவர் உரிய மற்றும் வலுவான நடவடிக்கைகளை எடுப்பார் என நம்புவதாகக் கூறினார்.
"நான் நம் ஊரு பையன்தான்" எனத் தன் உரையைத் தொடங்கிய எஸ்.ஜே. சூர்யா, மதுரைக்குப் பிறகு திருச்சி மற்றும் பிற மாவட்டங்களுக்குத் திரைப்பட விசிட்டிற்காகச் செல்லவுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், இப்படத்தில் தமக்கும் யோகி பாபுவுக்கும் இடையேயான காட்சிகள் ரசிகர்களைக் கவரும் வகையில் இருக்கும் எனத் தெரிவித்தார். விழாவில் கலந்துகொண்ட நடிகை மாளவிகா மேனன், கல்லூரி மாணவர்களின் உற்சாகமான வரவேற்புக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு, அனைவரும் படத்தைக் கண்டு ரசிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
- Madurai
‘சர்தார் 2’ படக்குழுவினர் உற்சாகப் பேட்டி
மதுரையில் ‘சர்தார் 2’ படக்குழுவினர் உற்சாகப் பேட்டி
